தள்ளாத வயதில் மரணித்தல்



சிலர் தள்ளாத வயது வரை வாழ்ந்து பெரும் அவதிக்கு ஆளாகி மரணிப்பார்கள். படுக்கையிலேயே மலஜலம் கழித்து, பெற்ற பிள்ளைகளாலேயே ஓரம் கட்டப்பட்டு மரணிப்பார்கள். சிலர் சுய நினைவை இழந்த பின்னர் மரணிப்பார்கள். இப்படியெல்லாம் ஒருவர் மரணிப்பது தீயவர் என்பதற்கு ஆதாரமாக அமையாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தள்ளாத வயது வரை வாழ்வதை விட்டும் பாதுகாப்புத் தேடினார்கள். (புகாரி 2822, 6365, 6370, 6374, 6390,)

இதை அடிப்படையாகக் கொண்டு தள்ளாத வயதில் மரணம் அடைவது துர்மரணம் என்று கருதக் கூடாது. ஏனெனில் ஒருவர் நீண்ட நாள் வாழ்ந்து இவ்வுலகில் துன்பங்களைச் சந்தித்தால் இதன் காரணமாக அவரது பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. மறுமையில் அவர் தண்டிக்கப்படாமல் தப்பிக்க உதவும். ஒரு மனிதருக்கு (மறுமையில்) நன்மை செய்ய இறைவன் நாடினால் இவ்வுலகிலேயே அவருக்குரிய தண்டனையை முன்கூட்டியே அளித்து விடுவான். ஒரு மனிதருக்கு (மறுமையில்) அல்லாஹ் தீமையை நாடினால் அவருடைய பாவங்களை நிலுவையில் வைத்து நியாயத் தீர்ப்பு நாளில் கணக்குத் தீர்ப்பான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி) நூல்: திர்மிதீ 2319

இறை நம்பிக்கையுடைய ஆணும், இறை நம்பிக்கையுடைய பெண்ணும் தமது விஷயத்திலும், தமது பிள்ளைகள் விஷயத்திலும், தமது செல்வங்களிலும் தொடர்ந்து துன்பங்களுக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ்வைச் சந்திக்கும் நாளில் அவர்கள் மீது எந்தக் குற்றமும் மீதமிருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்கள்: திர்மிதீ 2323, அஹ்மத் 7521, 9435

ஒருவர் நீண்ட நாள் வாழ்ந்து இன்னல்களை அனுபவித்தால் அதுவும் நன்மை தான் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மூமின்களின் காரியங்கள் வியப்பாக உள்ளன. அவரது அனைத்துக் காரியங்களும் அவருக்கு நன்மையாகவே அமைந்து விடுகின்றன. மூமினைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நிலை இல்லை. அவருக்கு மகிழ்ச்சி ஏற்படால் நன்றி செலுத்துகிறார். எனவே அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்குத் துன்பம் ஏற்பட்டால் பொறுத்துக் கொள்கிறார். எனவே அதுவும் அவருக்கு நன்மையாகி விடுகிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி) நூல்: முஸ்லிம் 5318

எனவே முதுமையில் மரணித்தாலும், இளமையில் மரணித்தாலும் இரண்டுமே நன்மையில் தான் முடியும்.

தள்ளாத வயது வரை வாழ்ந்து அதனால் மற்றவர்களுக்குச் சிரமம் தரக் கூடாது என்பதற்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடியிருக்க வேண்டும் என்பதை மேற்கண்ட சான்றுகளின் மூலம் அறியலாம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் முதுமையில் பார்வை போன பின்பு தான் மரணித்தார்கள். (முஸ்லிம் 1543)
இப்னு உமர் (ரலி) அவர்களும் தள்ளாத வயதில் பார்வை போன பின்பு தான் மரணித்தார்கள்.
கஃபு பின் மாலிக் (ரலி) அவர்கள் தமது முதுமையில் பார்வையிழந்த நிலையில் தான் மரணித்தார்கள். (புகாரி 3889, 4676, 6690, 7225)
எனவே தள்ளாத வயதில் அனைவராலும் ஒதுக்கப்பட்ட நிலையில் ஒருவர் மரணிப்பதால் அவருக்கு ஏற்பட்டது துர்மரணம் என்று கூற முடியாது.
திடீர் மரணம்
சிலர் மரணத்தின் எவ்வித அறிகுறியும் இல்லாமல் திடீரென்று மரணித்து விடுவார்கள். வெள்ளம், மழை, சுனாமி, தீ விபத்து, வாகன விபத்து என்று பல வகையிலும் மனிதர்கள் மரணிக்கிறார்கள்.

திடீர் என்று மரணம் அடைவது துர்மரணம் என்று பரவலாக நம்புகின்றனர். இந்த நம்பிக்கைக்கும் ஆதாரம் இல்லை.

திடீர் மரணத்தை விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடியதாக சில ஹதீஸ்கள் உள்ளன. இது துர்மரணம் என்பதற்காகக் கூறப்பட்டதாக நாம் புரிந்து கொள்ளக் கூடாது.

ஏனெனில் திடீர் மரணம் என்பதும் நல்ல மரணமே என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.
பிளேக் நோயில் இறந்தவர்கள், வயிற்றுப் போக்கில் இறந்தவர்கள், தண்ணீரில் மூழ்கி இறந்தவர்கள், இடிபாடுகளில் இறந்தவர்கள், மற்றும் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் ஆகியோர் உயிர் தியாகிகள் (ஷஹீத்கள்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 654, 721, 2829, ஷஹீத்கள் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அதற்கு நபித் தோழர்கள் யார் போருக்குச் சென்று கொல்லப்படுகிறாரோ அவர் தான் என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்படியானால் என் சமுதாயத்தில் உயிர் தியாகிகள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர் ஷஹீத் ஆவார். வயிற்றுப் போக்கால் இறந்தவர் ஷஹீத் ஆவார். பிரசவத்தின் போது மரணிக்கும் பெண்ணும் ஷஹீத் ஆவார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி)

நூல்: அஹ்மத் 17129, 21627, 21628, 21644, 21694 பிளேக் நோய் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் ஷஹாதத் (உயிர் தியாகி) என்ற நிலையைத் தரும் எனவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 2830, 5732

மேலே சொல்லப்பட்டவை அனைத்தும் திடீர் மரணங்கள் தாம். ஈமானுடன் வாழும் ஒருவருக்கு இது போல் ஏற்படும் திடீர் மரணம் நன்மையைத் தான் தரும் என்பதை இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் பல நபித்தோழர்களுக்குத் திடீர் மரணம் நிகழ்ந்துள்ளது. அதைத் துர்மரணம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கருதவில்லை.

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் தாய் திடீரென்று மரணித்து விட்டார். அவர் பேசியிருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருப்பார். எனவே அவர் சார்பில் நான் தர்மம் செய்தால் அவருக்கு அதன் நன்மை கிடைக்குமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம் என்றனர். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 1388, 2760

இது போல் திடீர் மரணம் அடைந்த எவரது மரணத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் துர்மரணம் என்று கூறியதில்லை.

கடுமையான வேதனையுடன் மரணித்தல்

சிலர் எவ்வித வேதனையையும் வெளிப்படுத்தாமல் சாதாரணமாக மரணித்து விடுவார்கள்.

மற்றும் சிலரது உயிர் போகும் போது கடுமையாக வேதனைப்பட்டு துடிதுடித்து மரணமடைவார்கள். இவ்வாறு ஒருவர் மரணமடைந்தால் அவருக்கு துர்மரணம் ஏற்படுவதாகப் பலரும் எண்ணுகின்றனர். இந்த எண்ணமும் தவறானதாகும்.
மரணத்தின் கடுமையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே அனுபவித்த பின், வேறு எவருக்கும் மரணம் கடுமையாக இருப்பதை நான் வெறுக்க மாட்டேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
நூல்: புகாரி 4446

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கடுமையான வேதனையுடன் தான் மரணத்தைத் தழுவியுள்ளார்கள். எனவே இத்தகைய வேதனையை ஒருவர் அனுபவிப்பதால் அதைத் துர்மரணம் எனக் கூற முடியாது.

மக்காவிலும், மதீனாவிலும் மரணித்தல்

மக்காவிலோ, மதீனாவிலோ ஒருவர் மரணிப்பது ஒரு பாக்கியம் என்ற நம்பிக்கை பலரிடமும் உள்ளது

இது பற்றி சில ஹதீஸ்கள் உள்ளன என்றாலும் அவை அனைத்தும் பலவீனமாகவே உள்ளன.



(மக்கா, மதீனா ஆகிய) இரண்டு புனிதத் தலங்களில் யார் மரணிக்கிறாரோ அவருக்கு எனது பரிந்துரை கட்டாயமாகி விட்டது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் தப்ரானியின் அல்கபீர் (6/240) நூலில் உள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் அப்துல் கபூர் பின் ஸஅது என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர்.

இரண்டு புனிதத் தலங்களில் ஒன்றில் யார் மரணிக்கிறாரோ அவர் கியாமத் நாளில் அச்சமற்றவராக எழுப்பப்படுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் தப்ரானியின் அல்அவ்ஸத் (6/89) நூலில் உள்ளது.

இதன் அறிவிப்பாளர்களில் மூஸா பின் அப்துர் ரஹ்மான் அல்மஸ்ரூகி இடம் பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவர் ஆவார்.

பைத்துல் முகத்தஸில் யார் மரணிக்கிறாரோ அவர் ஆகாயத்தில் மரணித்தவர் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக பஸ்ஸார் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளரான யூசுப் பின் அதிய்யா அல்பஸரி என்பவர் பலவீனமானவர். வானத்தில் மரணித்தவர் என்பன போன்ற சொற்களில், நபிமார்களின் சொற்களில் காணப்படும் கருத்தாழம் எதுவும் இல்லை.

இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் பலவீனமானவையாக இருப்பதுடன் இதன் கருத்தும் ஏற்புடையதாக இல்லை.

இரண்டு புனிதத் தலங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எத்தனையோ எதிரிகள் மரணித்துள்ளனர். முனாஃபிக்குகள் எனப்படும் வேடதாரிகள் பலரும் மதீனாவில் தான் இறந்தனர்.

அது போல் எத்தனையோ நபித்தோழர்கள் இரண்டு புனிதத் தலங்களை விட்டு வெளியேறி உலகின் பல பாகங்களிலும் மரணித்தனர். நபித்தோழர்களில் பெரும்பான்மையினர் புனிதத் தலங்களில் மரணிக்கவில்லை.
குறிப்பிட்ட இடத்தில் மரணமடைவது எவரது அதிகாரத்திலும், விருப்பத்திலும் உள்ளது அல்ல. நல்லவர் கெட்டவர் என்ற அடிப்படையில் மரணிக்கும் இடம் தீர்மானிக்கப்படுவதில்லை.

மேற்கண்ட காரணங்களால் இதன் பலவீனம் மேலும் அதிகரிக்கின்றது.
வெள்ளிக்கிழமையன்று மரணித்தல்

வெள்ளிக்கிழமை மரணிப்பதை சிறந்த மரணம் என்று நம்புகின்றனர். இந்தக் கருத்தில் சில நபிமொழிகளும் பதிவாகியுள்ளன. அவை பலவீனமாகவே உள்ளன.

யார் வெள்ளிக்கிழமை மரணிக்கிறாரோ அவர் கப்ரு வேதனையிலிருந்து காக்கப்படுவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ யஃலா (7/146) எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை யஸீத் அர்ரகாஷீ என்பவர் அறிவித்துள்ளார். இவர் பலவீனமானவர்.

இது போன்ற கருத்தில் மற்றொரு ஹதீஸ் திர்மிதீ 994வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது பலவீனமானது என்பதை திர்மிதீ அவர்களே இந்த ஹதீஸின் கீழே தக்க சான்றுகளுடன் விளக்கியுள்ளனர்.

இதே கருத்தில் அஹ்மத் நூலில் இரண்டு ஹதீஸ்கள் உள்ளன. 6294வது ஹதீஸை ஹிஷாம் பின் ஸஅது என்பார் அறிவிக்கிறார். இவர் பலவீனமானவர். 6359வது ஹதீஸை முஆவியா பின் ஸயீத் என்பார் அறிவிக்கிறார். இவர் யாரென்று அறியப்படாதவர்.

எனவே இந்தக் கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் பலவீனமாக உள்ளதால் வெள்ளிக்கிழமை மரணித்தால் அது சிறப்பானது என்பது தவறாகும்.

ஒரு மனிதர் எந்த நாளில், எந்த மாதத்தில், எந்த வயதில், எந்த இடத்தில் மரணிக்கிறார் என்பதற்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

இறந்தவரின் மனைவி செய்ய வேண்டியவை

இறந்தவர் ஆணாக இருந்தால் அவரது மனைவி கடைப் பிடிக்க வேண்டிய ஒழுங்குகள் சில உள்ளன. இந்த ஒழுங்குகளைச் சரியாக அறியாத காரணத்தால் பெண்களுக்குப் பல்வேறு அநீதிகள் இழைக்கப்படுவதை நாம் காண்கிறோம்.

கணவனை இழந்த பெண்கள் கணவன் இறந்த உடனேயே மறுமணம் செய்து விடாமல் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக் கெடு முடிந்த பின்னர் தான் மறுமணம் செய்து கொள்ள வேண்டும். மறுமணம் செய்வதைத் தள்ளிப் போடும் இந்தக் கால கட்டம் இத்தா எனப்படுகிறது.

மறுமணத்தைத் தள்ளிப் போடும் இந்தக் காலகட்டம் அனைவருக்கும் ஒரே மாதிரியான அளவுடையதல்ல.

கணவன் இறக்கும் போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால் கருவில் வளரும் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை மறுமணம் செய்யலாகாது.

கணவன் இறந்த மறு நாளே மனைவி குழந்தையைப் பெற்று விட்டால் அந்த ஒரு நாள் தான் இவளுக்குரிய இத்தா - திருமணத்தைத் தள்ளிப் போடும் - காலமாகும்.

கணவன் மரணிக்கும் போது எட்டு மாத கர்ப்பிணியாக மனைவி இருந்தால் அவள் குழந்தையைப் பெற்றெடுக்க ஏறத்தாழ இரண்டு மாதங்கள் ஆகலாம். இந்தக் காலமே இவளுக்குரிய இத்தாவாகும்.

கணவன் மரணிக்கும் போது மனைவி கருவுற்றிருக்கிறாளா? இல்லையா என்பது தெரியாவிட்டால் நான்கு மாதமும் பத்து நாட்களும் திருமணத்தைத் தள்ளிப் போட வேண்டும். நான்கு மாதம் பத்து நாட்களுக்குள் வயிற்றில் கரு வளர்வது தெரிய வந்தால் அவள் குழந்தையைப் பெற்றெடுக்கும் வரை இத்தா மேலும் நீடிக்கும்.

நான்கு மாதம் பத்து நாட்களில் குழந்தை இல்லை என்பது உறுதியானால் மறு நாளே அவள் மறுமணம் செய்து கொள்ளலாம்.

முதல் கணவனின் குழந்தையைச் சுமந்து கொண்டு இன்னொருவனுடன் வாழ்க்கை நடத்தினால் ஒருவனின் குழந்தைக்கு வேறொருவனைத் தந்தையாக்கும் மோசடியில் அது சேர்ந்து விடும்.

கணவன் இறந்த பின் மனைவி கருவுற்றிருந்தால் அவள் பிரசவிக்கும் வரை கணவனின் சொத்துக்கள் பங்கு வைக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்படும். ஆண் குழந்தையா? பெண் குழந்தையா? என்பதைக் கருத்தில் கொண்டும், கருவறையில் வளரும் குழந்தையின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டும் கணக்கிட்டு முதல் கணவனின் சொத்திலிருந்து பங்கு பெற்றுத் தரும் பொறுப்பு இவளுக்கு உள்ளது. எனவே தான் இஸ்லாம் இந்தச் சட்டத்தை வழங்கியுள்ளது.

இதற்கான ஆதாரங்கள் வருமாறு:

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும், பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். திருக்குர்ஆன் 2:234

உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும். அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவரது காரியத்தை அவன் எளிதாக்குவான்.

திருக்குர்ஆன் 65:4 ஒரு பெண்ணிண் வயிற்றில் கரு வளர்கிறதா என்பதை அறிந்து கொள்ள ஒரு மாதமே போதுமானது என்ற நிலையில் நான்கு மாதம் பத்து நாட்கள் என்று அதிக காலம் திருமணத்தைத் தள்ளிப் போடச் சொல்வது ஏன்? என்று சிலருக்குத் தோன்றலாம்.

மாதவிடாய் நின்றவுடன் ஒருத்தி கருவுற்றிருக்கிறாளா? இல்லையா என்பதை அறிந்து கொள்ள முடியும் என்றாலும் ஒரு பெண் சீக்கிரம் திருமணம் செய்ய ஆசைப்பட்டு தனது வயிற்றில் கரு வளரவில்லை என்று சொல்லி விடலாம்.

அல்லது அவள் கருவுற்றிருப்பது வெளிப்படையாகத் தெரியாத நிலையில் முதல் கணவன் இறந்து ஒரு மாதத்தில் மற்றொருவனை அவள் திருமணம் செய்தால் தனக்குப் பிறந்த குழந்தை தன்னுடையதாக இருக்காதோ என்று இரண்டாவது கணவன் சந்தேகப்படலாம்.

நான்கு மாதம் பத்து நாட்களில் ஒரு பெண் கருவுற்றிருப்பது அவளுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் தெரியும் அளவுக்கு வளர்ந்து விடும். நான்கு மாதம் பத்து நாட்களில் எந்த அறிகுறியும் தெரியாத நிலையில் இரண்டாவது கணவனுக்கு எந்தச் சந்தேகமும் வர முடியாது.

இப்படி திருமணம் செய்யாமல் தள்ளிப் போடுவதற்குப் பெயர் தான் இத்தா. ஆனால் தமிழக முஸ்லிம்கள் இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தால் இத்தா என்ற பெயரில் இருட்டறையில் பெண்களை அடைத்து வைக்கின்றனர். எந்தத் தேவைக்காகவும் வெளியே செல்லத் தடை விதிக்கின்றனர்.

மார்க்கம் கட்டளையிட்டவாறு ஹிஜாப் அணிந்திருந்த போதும் எந்த ஆணும் அவளைப் பார்க்கக் கூடாது என்கின்றனர்.

ஆண் குழந்தைகளைக் கூட பார்க்கக் கூடாது என்று தடை விதிக்கின்றனர்.
இவை அனைத்தும் மூடநம்பிக்கை ஆகும்.

கணவன் இறந்த பின் இஸ்லாம் அவளுக்கு வரையறுத்துள்ள காலத்துக்கு மறுமணத்தை அவள் தள்ளிப் போட்டால் அவள் இத்தாவைக் கடைப்பிடித்தவளாக ஆகி விடுவாள்.

இத்துடன் இன்னும் சில விதிகளும் உள்ளன. அவற்றை மட்டும் கடைப்பிடித்தால் போதுமானது.

மறுமணத்தைத் தள்ளிப் போட்டுள்ள இந்தக் காலகட்டத்தில் நறுமணம் பூசக்கூடாது. கண்மை இடக்கூடாது. அஸப் எனப்படும் வண்ண உடை தவிர வேறு வண்ண உடைகளை அணியக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி)
நூல்: புகாரி 313, 5341, 5343

துணிகளை நெய்வதற்கான நூல்களை முறுக்கிய நிலையில் சாயத்தில் முக்கி எடுத்துப் பின்னர் பிரித்து நெய்யப்படுவதே அஸப் எனப்படும். இவ்வாறு செய்வதால் முறுக்கப்பட்ட நூல் தொகுப்பின் உட்பகுதி சாயமில்லாமலும், வெளிப்பகுதி சாயமாகவும் இருக்கும். அதாவது வெள்ளையும், நிறமும் கலந்ததாக அது இருக்கும்.

முற்றிலும் வண்ணமாக உள்ள ஆடைகளைத் தவிர்த்து வெள்ளையும், வண்ணமும் கலந்த நிலையில் உள்ள ஆடைகளையோ, முற்றிலும் வெண்மையான ஆடைகளையோ அணியலாம்.

மறுமணத்தைத் தள்ளிப் போடும் இந்தக் காலகட்டத்தில் நகை அணியலாகாது. மருதானி போன்ற சாயங்கள் பூசக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூல்கள்: அபூ தாவூத் 1960, அஹ்மத் 25369

இவற்றைக் கடைப்பிடித்தால் ஒருத்தி இத்தாவைக் கடைப் பிடித்து விட்டாள் என்பது பொருள்.

இந்தக் காலகட்டத்தில் திருமணத்தை நிச்சயம் செய்யவும் கூடாது. (காத்திருக்கும் கால கட்டத்தில்) அவர்களை மணம் செய்ய எண்ணுவதோ, சாடை மாடையாக மணம் பேசுவதோ உங்கள் மீது குற்றம் இல்லை. அவர்களை நீங்கள் (மனதால்) விரும்புவதை அல்லாஹ் அறிவான். நல்ல சொற்கள் சொல்வதைத் தவிர இரகசியமாக அவர்களுக்கு வாக்குறுதி அளித்து விடாதீர்கள்! உரிய காலம் முடியும் வரை திருமணம் செய்யும் முடிவுக்கு வராதீர்கள்! உங்களுக்குள்ளே இருப்பதை அல்லாஹ் அறிவான் என்பதை அறிந்து அவனுக்கு அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத்தன்மை மிக்கவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்!திருக்குர்ஆன் 2:235

மறுமணத்தைத் தள்ளிப் போட்டுள்ள காலகட்டத்தில் அந்தப் பெண்ணிடம் ஆண்கள் பேசலாம் என்பதையும், அவ்வாறு பேசும் போது உண்னை நான் மணந்து கொள்கிறேன் என்று நேரடியாகப் பேசக் கூடாது என்பதையும், சாடைமாடையாக இவ்வாறு பேசிக் கொள்ளலாம் என்பதையும் இவ்வசனத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இத்தா காலத்தில் ஆண்களைப் பார்க்கவோ, பேசவோ கூடாது என்ற கருத்து முற்றிலும் தவறானது என்பதற்கும் இவ்வசனம் போதிய சான்றாக உள்ளது.

இது பற்றி மக்களிடம் அதிகமான அறியாமை நிலவுவதால் மேலும் சில சான்றுகளை முன் வைக்கிறோம்.

(என் கணவர்) அபூ ஸலமா மரணித்த போது நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அல்லாஹ்வின் தூதரே! அபூ ஸலமா மரணித்து விட்டார் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹும்மக்ஃபிர்லீ வலஹு வ அஃகிப்னீ மின்ஹு உக்பா ஹஸனதன் (இறைவா! என்னையும், அவரையும் மன்னிப்பாயாக! அவருக்குப் பகரமாக அவரை விடச் சிறந்ததைத் தருவாயாக!) எனக் கூறு என்றார்கள். நான் அவ்வாறு கூறினேன். அவரை விடச் சிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் எனக்குப் பகரமாகத் தந்தான் என்று உம்மு ஸலமா (ரலி) கூறுகிறார்கள். நூல்: முஸ்லிம் 1527

கணவரை இழந்த உம்மு ஸலமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தேடிச் சென்றுள்ளனர். இது தவறு என்றால் கணவனை இழந்த நீ எப்படி வெளியே வரலாம்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டிருப்பார்கள். வெளியே வந்த உம்மு ஸலமா (ரலி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்துள்ளார்கள். இத்தா காலகட்டத்தில் எப்படி ஒரு ஆணிடம் பேசலாம்? என்று அவர்கள் கேட்கவில்லை.

இத்தா இல்லாத காலங்களில் அன்னிய ஆடவனுடன் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அதைத் தான் இத்தாவின் போதும் கடைப்பிடிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் மற்ற நேரங்களில் வெளியே செல்வது போல் சென்று வருவது தவறல்ல என்பதற்கும் மேற்கண்ட ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.

இன்ஷா அல்லாஹ்


ஜனாஸாவின் சட்டங்கள்

தொடறும்

இந்த செய்திகளும் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கக் கூடும்:

அன்புடன்
கூனிமேடுகுரல்
M.ஷர்புதீன்

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்