இறந்தவர் சார்பில் ஹஜ் செய்தல்




ஜனாஸாவின் சட்டங்கள்


தொடர்

இறந்தவர் மீது ஹஜ் கடமையாகி இருந்து அதைச் செய்யாமல் அவர் மரணித்தால் அவர் சார்பில் அவரது வாரிசுகள் ஹஜ்ஜை நிறைவேற்றலாம்.

அது போல் இறந்தவர் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தால் அது கடமையாகி விடுகிறது. எனவே இறந்தவர் நேர்ச்சை செய்திருந்த ஹஜ்ஜை அவரது வாரிசுகள் நிறைவேற்றலாம். இதனால் இறந்தவர் மீது இருந்த ஹஜ் கடமை நீங்கி விடும்.

ஜுஹைனா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்திருந்தார். அதைச் செய்யாமலே மரணித்து விட்டார். அவர் சார்பில் நான் ஹஜ் செய்யலாமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம் அவர் சார்பில் நீ ஹஜ் செய். உன் தாய் மீது கடன் இருந்தால் அதை நீ தானே நிறைவேற்றுவாய். எனவே அல்லாஹ்வின் கடனை நிறைவேற்றுங்கள். நிறைவேற்றப்படுவதற்கு அது தான் அதிகத் தகுதி படைத்தது' எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1852, 7315

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'என் சகோதரி ஹஜ் செய்ய நேர்ச்சை செய்திருந்தார். ஆனால் இறந்து விட்டார்' எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அவர் மீது கடன் இருந்தால் நீ தானே நிறைவேற்றுவாய்?' என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'அல்லாஹ்வின் கடனே நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்தது' என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 6699

இறந்தவருக்காக மற்றவர்கள் ஹஜ் செய்வதில் பல விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

இறந்தவரின் கடன்களை அடைப்பது யார் மீது கடமையோ அவர்கள் தான் இறந்தவருக்காக ஹஜ் செய்ய வேண்டும். 'அவர் கடன்பட்டால் நீ தானே அதை அடைப்பாய்?' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து இதை அறியலாம்.

இறந்தவரின் தந்தை, மகன், அண்ணன், தம்பி போன்ற உறவினர்கள் தான் இறந்தவருக்காக ஹஜ் செய்ய வேண்டும்

இறந்தவருடன் இரத்த சம்பந்தம் இல்லாத ஒருவரைப் பிடித்து ஹஜ் செய்ய வைக்கின்றனர். அதற்குக் கூலியும் கொடுக்கின்றனர். இவ்வாறு செய்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

இறந்தவருக்காக ஹஜ் செய்யலாம் என்றால் அவர் இறக்கும் போது அவர் மீது ஹஜ் கடமையாகி இருக்க வேண்டும். ஒருவர் மரணிக்கும் போது ஏழையாக இருந்தார். அவர் மரணித்த பின் அவரது பிள்ளைகள் வசதி படைத்தவர்களாகி விட்டனர். இவர்களிடம் ஹஜ் செய்யும் வசதி இருந்தாலும் இவர்களின் தந்தை ஏழையாக மரணித்து விட்டதால் அவர் மீது ஹஜ் கடமையாக இருக்கவில்லை என்பதால் அவருக்காக ஹஜ் செய்யலாகாது.

அல்லாஹ்வின் கடன் என்பது கட்டாயக் கடமையைத் தான் குறிக்கும். நாமாக விரும்பிச் செய்வது கடனாக ஆகாது.

இறந்தவருக்காக நோன்பு நோற்றல்

இறந்தவர் மீது கடமையான அல்லது நேர்ச்சை செய்த நோன்பு ஏதும் நிறைவேற்றப்படாமல் இருந்தால் அதை அவரது வாரிசுகள் நோற்கலாம். அவ்வாறு நோற்றால் இறந்தவர் மீது இருந்த சுமை விலகி விடும்.
'தன் மீது நோன்புகள் கடமையாகி இருந்த நிலையில் ஒருவர் மரணித்து விட்டால் அவர் சார்பில் அவரது பொறுப்பிலுள்ள வாரிசு நோன்பு நோற்க வேண்டும்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி 1952

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'அல்லாஹ்வின் தூதரே! என் தாய் மீது ஒரு மாத நோன்பு கடமையாக இருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பில் அதை நான் நிறைவேற்றட்டுமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்! அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றப்படுவதற்கு அதிகத் தகுதி படைத்ததாகும்' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 1953

இறந்தவர் சார்பில் தொழுகையை நிறைவேற்ற முடியாது

ஒருவர் சில தொழுகைகளை விட்டு இறந்திருந்தால் அதை அவர் சார்பில் மற்றவர் நிறைவேற்றலாம் என்பதற்கு ஒரு ஆதாரமும் இல்லை.

நோன்பைப் பொறுத்த வரை நோய், பயணம் போன்ற காரணங்களால் பிரிதொரு நாளில் நோற்க அனுமதி உள்ளதால் நோன்பை ஒருவர் விடுவதற்கும், வேறு நாட்களில் நோற்பதற்கும் நியாயம் உள்ளது. இத்தனை நாட்களுக்குள் நோற்று விட வேண்டும் என்று கால நிர்ணயம் ஏதும் இல்லை.

ஹஜ்ஜைப் பொறுத்த வரை இந்த ஆண்டு தான் செய்ய வேண்டும் என்பது இல்லை. மரணிப்பதற்குள் ஒரு தடவை செய்ய வேண்டும் என்பதால் கடமையான பின்பும் அதைத் தள்ளி வைக்க முகாந்திரம் உள்ளது.

ஆனால் தொழுகையைப் பொறுத்த வரை அது நேரம் குறிக்கப்பட்ட கடமையாக உள்ளது.

நோயாளிகளுக்கும், பயணிகளுக்கும் தொழும் முறையில் சில சலுகைகள் உள்ளன. அதிகபட்சம் இரண்டு தொழுகைகளை ஒரு நேரத்தில் ஜம்வு செய்து தொழ சலுகை உண்டு. அதற்கு மேல் தாமதப்படுத்திட எந்த அனுதியும், ஆதாரமும் இல்லை.

மாதவிடாய் நேரத்தில் விட்ட நோன்பை பின்னர் வைக்க வேண்டும் எனக் கூறும் இஸ்லாம், மாதவிடாய் நேரத்தில் விட்ட தொழுகைகளை பின்னர் நிறைவேற்ற வேண்டும் என்று கூறவில்லை.

தொழுகையைத் தவறவிட்டால் தவற விட்டது தான். அதற்காக பாவமன்னிப்புக் கேட்டுத் திருந்தி இனி மேல் உரிய நேரத்தில் தொழுவது தான் அவசியம்.

அவர்களுக்குப் பின்னர் வழித் தோன்றல்கள் வந்தனர். அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.
திருக்குர்ஆன் 19:59,60

தொழுகையைத் தவற விட்டவர்கள் அதற்காகப் பாவ மன்னிப்புக் கேட்டுத் திருந்துவதைத் தான் திருக்குர்ஆன் பரிகாரமாகக் கூறுகிறது. விட்ட தொழுகைகளைத் திரும்பத் தொழுமாறு கூறவில்லை.

தான் விட்ட தொழுகைகளையே மறு நாள் நிறைவேற்ற முடியாது எனும் போது மற்றவர்கள் நிறைவேற்றலாம் என்ற பேச்சுக்கே இடமில்லை.

இன்ஷா அல்லாஹ்


ஜனாஸாவின் சட்டங்கள்

தொடறும்

இந்த செய்திகளும் தங்களுக்கு பயனுள்ளதாக இருக்கக் கூடும்:

அன்புடன்
கூனிமேடுகுரல்
M.ஷர்புதீன்



டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்