பள்ளிவாசல் தகர்ப்பு: இலங்கையில் மற்றொரு இனவாத யுத்தத்துக்கு வித்திடப்படுகிறதா?


தம்புள்ளை: கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2012) இலங்கையின் தம்புள்ளை மாநகரில் புத்த பிக்குகள் தலைமையில் 2000 பௌத்தர்கள் அணி திரண்டு பேரணியொன்றில் கலந்து கொண்டனர்.

'புனித பூமி எனப் பிரகடனப்படுத்தப்பட்டதும் புனித ரங்கிரி விகாரை அமைந்துள்ள துமான தம்புள்ளை புனிதப் பிரதேசத்தில் அந்நிய மத வழிபாட்டு ஸ்தலங்கள் இருப்பது சட்டவிரோதம்' என்ற அடிப்படையில் பேரணியாளர்கள் நகரில் அமைந்திருந்த முஸ்லிம் பள்ளிவாயில் ஹிந்துக் கோவில் ஆகியவற்றை இடித்துத் தகர்த்துளனர். இதனால் இப்பிரதேசத்தில் பெரும் பதட்டம் நிலவியது.

அப்பிரதேசத்தில் சுமார் 50 வருட காலமாக முஸ்லிம் மக்களின் வழிபாட்டுத்தலமாக இருந்துவரும் மேற்படி பள்ளிவாயில் மீது முதல் நாள் இரவு வெடிகுண்டு வீசப்பட்டுள்ள போதிலும் பொதுமக்கள் எவருக்கும் அதனால் பாதிப்புகள் ஏற்படவில்லை.

இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள இலங்கைப் பிரதமர் தி.மு.ஜயரத்ன 'நீண்ட கால பௌத்த வரலாற்றினைக் கொண்ட தம்புள்ள புண்ணிய பூமியிலோ அல்லது நாட்டில் அமைந்துள்ள ஏனைய புண்ணிய பூமியிலோ சட்டவிரோத நிர்மாணப் பணிகளுக்கு இடமளிக்க அரசாங்கம் தயாராக இல்லை' எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் அரை நூற்றாண்டு காலமாக உயர்ந்த மினராக்கள் எதுவும் இன்றி ஒரு சாதாரணக் கட்டிடமாக இருந்துவரும் முஸ்லிம் பள்ளிவாயிலையும் ஹிந்துக் கோவிலையும் இடித்துத் தகர்த்துள்ள இந்த இனவாத நடவடிக்கை முஸ்லிம் மக்களையும் ஹிந்து மக்களையும் பெரிதும் புண்படுத்தியுள்ளது. 

இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கு எதிரான இந்தத் துவேஷப் போக்கு எதிர்காலத்தில் இலங்கை மக்களின் ஒற்றுமையான சகவாழ்வைப் பெரும் கேள்விக்குறியாக்கும் என அஞ்சப்படுகிறது.

இலங்கைக்கு எதிரான ஐ.நா. தீர்மானத்தின் போது, அரபு நாடுகள் இலங்கைக்குச் சார்பாக வாக்களித்துள்ள நிலையில், இலங்கையில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினரின் வழிபாட்டுத்தலம் சிங்கள பௌத்த இனவாதிகளால் இடித்துத் தகர்க்கப்பட்டுள்ள சம்பவம், உலக முஸ்லிம் நாடுகளின் அதிருப்திக்கு ஆளாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                                                                                                               நன்றி இந்நேரம் இணையதளம்

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்