செக் பண்ணுங்க... ஹெல்த்தியா இருங்க,,,


"ஓட ஓட ஓட தூரம் குறையலை...
பார்க்கப் பார்க்கப் பார்க்க வேலை குறையலை...’
- இப்படி பாடாத குறைதான்...

வீட்டிலிருக்கும் பெண்களுக்கும் சரி, வேலைக்குப் போவோருக்கும் சரி... எப்போதும் வேலை வேலை... வேலை மேல் வேலை



ஒரு நாளைக்கு 24 மணி நேரம் போதாமல் ஓடி, ஓடி உழைக்கிற அவர்கள், தமக்காக எடுத்துக்கொள்கிற நேரம் மிகக் குறைவு. கணவருக்கோ, பிள்ளைகளுக்கோ, வீட்டு உறுப்பினர்களுக்கோ உடல்நலக் குறைவு என்றால் பதறிப்போய், பார்த்துப் பார்த்துக் கவனித்துக்கொள்கிற அவர்கள், தம் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்கிறார்களா என்றால் இல்லை என்பதுதான் பலரின் பதிலுமாக இருக்கும்.

பெண் என்கிற அஸ்திவாரம் பலமாக இருந்தால்தான், அவளது குடும்பம் ஆட்டம் காணாமல் ஆரோக்கியமாக இருக்கும். ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ எனப்படுகிற வருடாந்திர உடல் பரிசோதனைகள் பெரும்பாலும், ஆண்களைக் குறிவைத்தே விளம்பரப்படுத்தப்பட, பெண்களுக்குத்தான் அது அதிக அவசியம் என்கிறார் மகப்பேறு மற்றும் ரத்த நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்  மகேஸ்வரி.

மிக எளிதாகச் செய்து கொள்ளக்கூடிய அந்தப் பரிசோதனைகளின் மூலம், பல பயங்கரமான நோய்களை ஆரம்பத்திலேயே கிள்ளி எறியலாம் என்கிற அவர், வயதுக்கேற்ப ஒவ்வொரு பெண்ணும் வருடம் ஒருமுறை கட்டாயம் செய்துகொள்ள வேண்டிய மருத்துவப் பரிசோதனைகள் பற்றியும், அவற்றின் அவசியம் பற்றியும் விளக்கமாகப் பேசுகிறார்.

முழுமையான ஹீமோகிராம்

நூற்றில் 95 பெண்களுக்கு இருக்கிற பிரதான பிரச்னை ரத்தசோகை. முகம், கண்கள், நாக்கு வெளிறிக் காணப்படுவதை வைத்து ஒருவருக்கு ரத்தசோகை இருக்கலாம் என சந்தேகப்படலாம். தவிர சோர்வு, கவனமின்மை, அளவுக்கு அதிகத் தூக்கம், முடி உதிர்வு, மூச்சு வாங்குதல், குளிர்ச்சியான சூழலைத் தாங்க முடியாமை, மாதவிலக்குப் பிரச்னை எனப் பலதும் ரத்தசோகைக்கான அறிகுறிகளே... இதன் தொடர்ச்சியாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, அடிக்கடி உடல்நலம் பாதிக்கப்படும். பெண்களுக்கு மாதவிலக்கு தவிர்க்க முடியாத நிகழ்வு என்பதால், அதுவும் அவர்களது ரத்த சோகைக்கான முக்கிய காரணமாகிறது.

6 மாதங்களுக்கொரு முறை முழுமையான ரத்தப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், ஹீமோகுளோபின் அளவு, ரத்தத்தில் உள்ள சிவப்பு மற்றும் வெள்ளை செல்கள், ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கையைத் தெரிந்து கொண்டு, மேற்சொன்ன பிரச்னைகளை ஆரம்பத்திலேயே சரி செய்ய முடியும். பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு 11 முதல் 12 கிராம் இருக்க வேண்டும். இது குறைகிற போது கவனம் தேவை.

லிபிட் புரஃபைல்

இது உடலிலுள்ள நல்ல, கெட்ட கொழுப்பு அளவுகளைத் தெரிந்துகொள்வதற்கான சோதனை. மொத்த கொழுப்பின் அளவு, அதில் ஹெச்.டி.எல். எனப்படுகிற நல்ல கொலஸ்ட்ரால் மற்றும் எல்.டி.எல். எனப்படுகிற கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைக்ளிசரைட் எனப்படுகிற கொழுப்பு அமில அளவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.

நீரிழிவில் ஆரம்பித்து, இதய நோய் வரை சகலத்துக்கும் கொலஸ்ட்ராலே அடிப்படை. இவற்றில் எல்.டி.எல் 100-ஐக் கடந்தாலோ, ஹெச்.டி.எல் 50-க்குக் குறைந்தாலோ எச்சரிக்கை அவசியம்.

ரத்த சர்க்கரை

நீரிழிவு வந்தால், உணவில் மட்டுமின்றி, வாழ்க்கையில் உள்ள அத்தனை இனிப்பான விஷயங்களுமே நம்மை விட்டு விலகிச் செல்கின்றன. தலை முதல் கால் வரை பாரபட்சமின்றி, உடலின் அனைத்து உறுப்புகளையும் பாதிக்கக் கூடியது நீரிழிவு. யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். குடும்பப் பின்னணியில் நீரிழிவு உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் கொஞ்சம் அதிகம். இதற்கான ரத்தப் பரிசோதனையை வெறும் வயிற்றிலும், பிறகு சாப்பிட்ட 2 மணி நேரம் கழித்தும் செய்ய வேண்டும். வெறும் வயிற்றில் 100 மி.கிராமுக்குக் குறைவாகவும், சாப்பிட்ட பிறகு 140 மி.கி-க்கு குறைவாகவும் இருந்தால் நோ பிராப்ளம்.

தைராய்டு

வயது வித்தியாசமின்றி, யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். தலை முதல் கால் வரை ஒட்டுமொத்த உடலையும் கட்டுப்படுத்துகிற ஒருவித ஹார்மோன். இது சரியில்லாவிட்டால், மூளை வளர்ச்சி பாதிப்பது, ரத்த செல்கள் முதிர்ச்சியடையாமை, மாதவிலக்கு பிரச்னை, வயிற்றுக் கோளாறுகள், கருத்தரிப்பதில் சிக்கல், பருமன், தலைமுடி உதிர்வது என ஏகப்பட்ட பாதிப்புகள் வரலாம். தைராய்டு சுரப்பு கூடினாலும் பிரச்னை, குறைந்தாலும் பிரச்னை. எளிமையான ரத்தப் பரிசோதனை மூலம் இதைத் தெரிந்து கொள்ளலாம்.

மேமோகிராம்

குடும்பப் பின்னணியில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால், அந்த வழியில் வருபவர்களுக்கும் அது பாதிக்கும் அபாயங்கள் அதிகம். சமீப காலமாக, அப்படி குடும்பப் பின்னணி இல்லாதவர்களையும் மார்பகப் புற்றுநோய் அதிகம் தாக்குவதைப் பார்கிறோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் மார்பகங்களை சுய பரிசோதனை செய்து, கட்டிகளோ, வீக்கமோ, கசிவோ இருக்கிறதா எனப் பார்க்க வேண்டும். தவிர வருடம் ஒரு முறை மேமோகிராம் சோதனையும் அவசியம். எக்ஸ் ரே மாதிரியான எளிய சிகிச்சைதான் அது. ஆரம்பக்கட்டத்திலேயே கண்டுபிடித்தால், மார்பகங்களை நீக்கும் அளவுக்குப் போக வேண்டியிருக்காது.

பாப் ஸ்மியர்

இந்தியப் பெண்களை அதிகம் தாக்கும் புற்றுநோய்களில் கர்ப்பவாய் புற்றுநோய்க்கே முதலிடம். திருமணமான எல்லா பெண்களும் கட்டாயம் கர்ப்பவாய் புற்றுநோய்க்கான பாப் ஸ்மியர் சோதனையைச் செய்துகொள்ள வேண்டும். திருமணமாகாத ஆனால் பாலியல் தொடர்புள்ள பெண்களுக்கும் இந்தச் சோதனை அவசியம். சாதாரண புண்ணாகத்தான் அறிகுறி ஆரம்பிக்கும். அலட்சியமாக விட்டால், புற்றுநோயில் போய் நிற்கும்.

பிறப்புறுப்புத் திசுக்களை, குச்சி மாதிரியான ஒரு பிரத்யேகக் கருவியின் மூலம் லேசாகச் சுரண்டி செய்யப்படுகிற சோதனை இது. மயக்க மருந்து தேவையில்லை. இரண்டே நிமிடங்களில் செய்து விடலாம்.

சிறுநீர் பரிசோதனை

ரத்தத்தில் சர்க்கரை மற்றும் உப்பின் அளவு, சிறுநீரகத் தொற்று, சிறுநீரகங்களின் இயக்கம் போன்றவற்றைத் தெரிந்து கொள்வதற்கான சோதனை.
இந்த பரிசோதனைகளை எல்லாம் தவறாம செய்து கொள்ள வேண்டும் தோழிகளே.!{நன்றி தினகரன் மகளிர் பகுதி}
{

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்