அன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

நான் கடந்த ஆகஸ்டு மாதத்தில் " முஸ்லிம் பெண்களிடம் வழிப்பறி " என்ற தலைப்பில் எங்கள் ஊர்ப் பகுதியில் நடைப் பெற்ற ஒரு கொள்ளைச் சம்பவத்தைப் பற்றி நம் குழுமத்தில் எழுதியிருந்தது நம் சகோதரர்களுக்கு நினைவிருக்கலாம்.  

அந்தச் செய்தியை நம் குழுமச் சகோதரர்கள் தத்தம் நண்பர்களுக்கு forward செய்ய, அந்த நண்பர்கள் அதனை அவரவர் நண்பர்களுக்கு மீண்டும் forward  செய்ய இறுதியில் அந்தச் செய்தி உலகம் முழுவதும் பயணித்து விட்டது. அல்ஹம்துலில்லாஹ்.  

இதுதான் நான் முதன் முதலாக இந்தக் குழுமத்தில் வெளியிட்ட செய்தி என்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே.   அதனைத் தொடர்ந்து தினந்தோறும் எனக்கு வந்த தொலைப்பேசி அழைப்புகள் கொஞ்சநஞ்சமல்ல.  மேற்படி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்கள் இருவரும் இப்போது எப்படியிருக்கிறார்கள் - போலிஸில் கொடுத்த புகார் என்னவாயிற்று  நகைகள் கிடைத்ததா? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு என்னைத் திக்குமுக்காட வைத்து விட்டார்கள். 

 இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற மேற்கத்திய நாடுகளிலிருந்தும், அரபு மற்றும் வளைகுடா நாடுகளிலிருந்தும், மலேஷியா, சிங்கப்பூர் முதலிய கீழ்த்திசை நாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் கிராமங்களிலிருந்தும் தினசரி தொலைப்பேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.  

தமிழகத்தின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம் பெண்களுக்கு ஏற்பட்ட இந்தத் துயரம் உலகம் முழுவதும் பரந்து திரிந்து உழைத்து வாழும் நம் சமுதாய மக்களின் உள்ளத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும்,  இனிமேலும் இது போன்ற சம்பவங்கள் ஏற்படக்கூடாது என்பதில் அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும் அறிந்து என்னால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை.  மாஷா அல்லாஹ்!  இதுதான் இஸ்லாத்தின் அற்புதம் போலும்.

நமது குழும நண்பர்களுக்கு நன்றி சொல்ல எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை.

கைர்.  இது ஒருபுறமிருக்க, மேற்படி வழிப்பறிச் சம்பவத்தை யாரோ ஒரு அன்புச் சகோதரர் நர்கிஸ் என்ற தமிழ் முஸ்லிம் இதழுக்கு சமீபத்தில் அனுப்பியிருக்கிறார் போல் தெரிகிறது.  கடந்த ஓரிரு வாரங்களாக மீண்டும் தொலைபேசி அழைப்புகள். " நர்கிஸ் பத்திரிக்கையில் நான் இந்தச் சம்பவத்தைப் படித்தேன்.........  ". என்று ஆரம்பித்து பல கேள்விகள்.

அன்புச் சகோதரர்களே!  இறைவன் அருளால் அந்தப் பெண்கள் இருவரும் இப்போது நலமாக இருக்கிறார்கள்.   மேற்கண்ட அதிர்ச்சியிலிருந்து ஒருவாறு மீண்டு இப்போது சகஜ நிலைக்குத் திரும்பி விட்டார்கள்.  நகைகள் போனது போனதுதான்.  மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இல்லை.  இருந்த போதிலும் நகைகளைப் பிடுங்கியதோடு நமது உயிருக்கும் மானத்துக்கும் பங்கம் விளைவிக்காது விட்டார்களே அதுவே போதும் என்று ஆறுதல் பெற்றார்கள்.

நேற்று கூட பெங்களூருவிலிருந்து ஷஃபீயுல்லாஹ் என்ற ஒரு நண்பர் எனக்கு போன் செய்து காணாமல் போன பொருள்கள் திரும்பக் கிடைக்க ஒரு வழி இருக்கிறது.  யாசீன் சூராவை 10 தடவை ஓதி 2 ரக்அத் பயபக்தியோடும் இறைவன் மீதி நம்பிக்கையோடும் நபில் தொழுது 
அல்லாஹ்விடம் துஆ கேட்டால், இன்ஷா அல்லாஹ், திரும்பக் கிடைக்கும் என்று சொன்னார்.

அவருக்கும். இது விஷயத்தில் பல்வேறு கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தொலைபேசி மூலம் எனக்குத் தெரிவித்த நண்பர்களுக்கும், இநத்ச் செய்தியை சாதாரண விஷய்மாகக் கருதாமல் மிகவும் சீரியஸாகக் கருதி தங்கள் நண்பர்கள் மூலமாக உலகம் முழுவதும் பரப்பிய நண்பர்கள் மற்றும் நம் குழுமச் சகோதரர்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல இறைவன் இம்மையிலும் மறுமையிலும் பேரருள் புரிவானாக.  ஆமீன்.

எனக்கு இன்னும் இந்தச் சம்பவம் குறித்து தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டிருப்பதாலும் மேலும் சில வாரங்கள் இத்தகைய அழைப்புகள் தொடரலாம் என்று எதிர்பார்ப்பதாலும், இன்னும் ஓரிரு நாளில் இன்ஷா அல்லாஹ்,  நான் ஹஜ்ஜுக்குப் புறப்படவிருப்பதையும் கருத்தில் கொண்டு
இந்தச் செய்தியைப் பதிவு செய்கிறேன்.

மேலும், எங்களின் ஹஜ் மப்ரூரான - மக்பூலான ஹஜ்ஜாக அமைந்திட மின்னஞ்சல் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் துஆ செய்த - அனைத்து நல்லுள்ளங்களுக்காகவும் நாங்களும் துஆ செய்கிறோம். எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவருக்கும் ஹஜ் செய்யும் பக்கியத்தைத் தந்தருள்வானாக.  நமது பாவங்கள் அனைத்தையும் மன்னித்து இம்மையிலும் மறுமையிலும் பேரருள் புரிவானாக. ஆமீன்.
 

டாப் 10 செய்திகள்

பார்வையாளர்கள்